மாந்தரின் மாந்தர்கள்






உயிர் உய்ய
ஊண் மருவி 
உடல் சேரும்
உறவுகளே மருந்தென்போம் – அவ்
உறவுகளின்  உருத்தரிந்து
உயிர்நாள் உய்விக்கும்
உலகத்தின் நாயகர்கள்
இவர்கள்

பிணி பல பிணைந்திடினும்
பிரியமுடன்  முன் வந்து
பிணி நீக்கி
வினை செய்யும்
விந்தையர் நம்
மருத்துவர்கள்

பிண்டமாய் பிறப்பெடுக்கும்
பிறவிகளை
பிரசவம் செய்து
பிருதிவி கொணரும்
பிரியர்கள் நம்
செவிலியர்கள்

ஞாலத்தில்
ஞாபகம்
கொண்ட நாள் முதலும்
கண்டதில்லை இப்
பெருநோயை

கொள்ளை நோய்
கண்டாலும் கலங்காது
களப்பணி கண்டு வரும்
கருணைமிகு
காவலாளிகள் நம்
கலைஞர்கள்

ஆம் கலைஞர்கள்தான்.
சினை கண்ட தாய்க்கெல்லாம்
சிதையாது
சிலை வார்க்கும்
சிந்தை கொண்ட
மாந்தர்களை
கலைஞரென
கதைக்காமல் வேறென்ன
கதைப்பது ?

கதைப்போம் இக்
களப்பணி வீரர்களையும்
கலைஞர் என்றே
நாவினிலே நளபாகத்தின்
நாட்டியத்தை
மீட்டெடுப்போரை.
வாழ்த்தியும்
வணங்கியும்.
  

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்