இடுகைகள்

தமிழ் கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவரஸா

படம்
  கருவில் உதித்து உரு கண்ட என் சிசுவின் பொக்கை வாய் நகையும் அசௌகரிய அழைப்பின் அழுகையும் உதிரம் மிகுந்த இளிவரலும் அது கொணர்ந்த உவகையும் மாந்தர் மகிழ்வின் மனம் புரியா மருட்கையும் அள்ளி அணைக்கும் அன்புகள் உணரா அச்சமும் -பின் அன்பின் இனம் கண்ட பெருமிதமும் அண்டத்தில் அணைத்தோர் வசம் செல்லும் வெகுளியும் பின் சோர்ந்து துயிலும் அமைதியும் அகிலம் ஆளவிருக்கும் என் ஈஸ்வரியின் நவரசங்கள்            

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

புகைப்படங்கள்

படம்
காலத்தை கரைக்காமல் கதை சொல்லும் கலைஞன் காண ஒலியிலும் கானம் சேர்க்கும் கலைஞனின் கருப்பொருள் காணென காட்டி களிப்பு தரும் கண்ணாடி புகைப்படங்கள்